#வாசப்படி #மனைவி#குடும்பம்#இப்ராஹீம் நபி#இஸ்மாயீல்நபி
உள்ளே - வெளியே 3
( வாயிற் படி )
ஒரு பாலைவனத்தில் சிற்றூர்.
குதிரையில் வந்த ஒரு பெரியவர் ஒரு வீட்டின் முன் நின்றார் . "வீட்டில் யார் இருக்கிறார்கள் ?" என்று குதிரையில் இருந்தபடியே கேட்டார்.
வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெண் வாசற்படியில் வந்து நின்றாள் .
பெரியவர் அவளிடம் , " உன் கணவர் எங்கே ? " என்று வினவினார் .
அவள் சிடுசிடுப்போடு , "வீட்டில் இல்லாதவரைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள் ? " என்றாள் .
அவர் " உன் கணவர் எப்போது திரும்புவார் ? "என்று கேட்டார் .
அவள் "யாருக்கு தெரியும் ? என்றாள் .
அவர் " உண்ண ஏதேனும் கிடைக்குமா ?" என்றார் .
அவள் "நாங்களோ பசியிலும் பட்டினியிலும் வாடிக் கொண்டிருக்கும் இதில் உங்களுக்கு எதைக் கொடுப்பது ?" என்றாள்
அதைக் கேட்ட அந்த பெரியவரின் முகம் வாடியது .
அவர் , " நல்லது நான் சென்று வருகிறேன் . உன் கணவர் வீட்டுக்கு வந்ததும் இன்ன இன்ன அடையாளம் உடையவர் இங்கே வந்து இருந்தார். தங்களுக்கு வாழ்த்துக் கூறினார். அதன்பின் இந்த வாசல்படி நன்றாக இல்லை எனவே அதை மாற்றி அமைக்கச் சொன்னார் என்று உன் கணவரிடம் சொல் " என்று கூறி விட்டு போய்விட்டார் .
அவளுடைய கணவர் மாலையில் வீடு திரும்பினார் .
அவள் அவரிடம் " இன்ன இன்ன அடையாளம் உடைய ஒரு பெரியவர் வந்திருந்தார் . உங்களுக்கு வாழ்த்துக் கூறினார் " என்றாள் .
வந்தவர் யார் என்பதை புரிந்து கொண்ட அவர் , " அவரை வீட்டுக்குள் அழைத்தாயா ? உணவு கொடுத்து உபசரித்தாயா ? என்று கேட்டார் .
அவள் குற்ற உணர்வோடு தலை குனிந்து நின்றாள் .
'அவர் " அந்தப் பெரியவர் ஏதாவது சொன்னாரா ? " என்று கேட்டார்.
அவள் " ஆம் . இந்த வீட்டு வாசற்படி நன்றாக இல்லை அதனால் வேறு வாசற்படியை வைக்கச் சொன்னார் " என்றாள் .
அவர் " பாவி பெண்ணே ! வந்திருந்தவர் என் தந்தையார். நெடுங்காலத்திற்கு பிறகு என்னை பார்க்க வந்திருக்கிறார். நெடும் தூரத்திலிருந்து வந்து இருக்கிறார். அவரை நீ உபசரிக்க வேண்டுமா ? என்று கேட்டார் .
" அவர் உங்கள் தந்தை என்று என்னிடம் கூறவே இல்லையே ! "
" நீ கேட்டிருக்கலாமே ? அவர் உன்னை சோதித்திருக்கிறார் . சரி, யாராக இருந்தால் என்ன ? நெடுந்தூரப் பயணம் செய்து களைத்து போயிருக்கும் ஒரு முதியவரை நீ உபசரிக்க வேண்டாமா ? அவர் "வாயிற்படி " என்று சொன்னது உன்னைதான். அவரை உன்னை சரியாக மதிப்பிட்டு இருக்கிறார். வீட்டுக்கு வந்தவர்களை அன்போடு உபசரிப்பவள்தான் இல்லத்தரசி . அந்த குணம் கொஞ்சம் கூட இல்லாத உன்னோடு குடும்பம் நடத்துவது பாவம். இல்லறம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று கூறி அவர் அவளுக்கு மண விலக்கு அளித்து அனுப்பி விட்டார் .
பின்னர் அவர் மற்றொரு பெண்ணை மணம் புரிந்து கொண்டார்.
அடுத்த ஆண்டு அதே பெரியவர் அதே வீட்டிற்கு முன் வந்து நின்றார்.
வெளியிலிருந்து வந்த ஓசையைக் கேட்டு ஒரு பெண் வாயிற்படியில் வந்து நின்றாள் .
பெரியவர் " அம்மா நீ யார் ? "என்று கேட்டார் .அந்த பெண், "நான் இன்னாரின் மனைவி, இன்னாரின் மகள் " என்றாள் .
" நீங்கள் நலமாக இருக்கிறீர்களா ?"என்று பெரியவர் கேட்டார் .
" இறைவனின் அருளால் நலமாக இருக்கிறோம்".
" உன் கணவர் எப்படிப்பட்டவர் ?"
"நல்லவர் என்னை அன்போடு பார்த்துக் கொள்கிறார்" .
" உன் கணவர் எங்கே ?"
" வேட்டைக்காக போயிருக்கிறார்"
" எப்போது வருவார் ? "
" இது அவர் வரும் நேரம்தான். நீங்கள் வயது முதியவராக இருக்கிறீர்கள். நெடுந்தூரம் பயணம் செய்த களைப்பும் பசியும் உங்கள் முகத்தில் தெரிகிறது தயவுசெய்து நீங்கள் எங்கள் வீட்டில் தங்கி இளைப்பாற வேண்டும் .ஏதோ எங்களிடம் இருக்கும் உணவை தருகிறேன் . நீங்கள் பசியாற வேண்டும்.
அந்த பெண் வீட்டிற்குச் சென்று ரொட்டி , பால் , இறைச்சி, பழங்கள் எல்லாம் கொண்டுவந்து பெரியவரை உண்ணுமாறு அன்போடு வேண்டினாள் .
தண்ணீர் கொண்டுவந்து பெரியவரின் கால்களைத் தூய்மைப்ப்படுத்தினாள் .
பெரியவர் உணவை உண்டு மகிழ்ந்தார். " இறைவா ! இப்பொருள்களை இம்மண்ணில் அதிகமாய்க்கி வை ! " என்று பிரார்த்தனை புரிந்தார் .
அந்தப் பெண்ணை நோக்கி , " அம்மா நன்றாக இரு . உன் கணவர் வந்தால், என் வாழ்த்தைக் கூறு .அவருடைய வாயில்படி நன்றாக இருக்கிறது என்றும், அதனால் அதை எதற்காகவும் எப்போதும் மாற்றக் கூடாது என்றும் நான் கூறியதாக அவரிடம் சொல் . நான் சென்று வருகிறேன் "
அந்தப் பெரியவர் சென்றுவிட்டார் .சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த கணவரிடம் அந்தப் பெண் நடந்ததைச் சொன்னாள்
அவர் " அன்பே..! வந்தவர் என் தந்தை ஆவார் . அவர் யார் என்று தெரியாமலே அவரை அன்போடு உபசரித்து இருக்கிறாய். உன்னை என் மனைவியாகப் பெற்றது அது என் பாக்கியம். என் தந்தை உன்னை ஆசீர்வதித்திருக்கிறார் . நீ பெரும்பேறு பெற்று விட்டாய் . அவர் வாசற்படி என்று சொன்னது உன்னைதான் "என்று கூறி மகிழ்ந்தார்.
வெளிரங்கத்தில் வாசற்படி என்றாலும், உள்ரங்கத்தில் மனைவி என்றே பொருள்படும்
அவர் இறுதிவரை அந்த ஒரு மனைவி உடனேயே இல்லறம் நடத்தினார் .
அந்தப் பெரியவர் , யூதமதம் , கிறிஸ்தவம் இஸ்லாம் என்று இன்று மூன்றாகப் பிரிந்திருக்கும் சமயங்களுக்கு மூல பிதாவான இறை தூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள் ஆவார் .
அவருடைய புதல்வர் இறைத்தூதர் இஸ்மாயில் (அலை) (இஸ்மவேல்) ஆவார் .
இது நடந்த இடம் மக்கா. காலம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் .
இறைத்தூதர் இப்ராஹிம் அவர்கள் கூறிய "வாயிற்படி "என்பது ஒரு அற்புதமான குறியீடு .
பொதுவாக பெண், சிறப்பாக இல்லத்தரசி எப்படி இருக்கிறாள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அந்த குறியீடு அழகாக விளக்குகிறது .
பெண் வாயிற்படியாக இருக்கிறாள் .
வாயிற்படி வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும் .
பெண்ணின் வழியாகத்தான் நாம் இந்த உலகத்திற்கு வந்தோம் .
நாம் இந்த உலகை வாழ்க்கைக்குள் நுழைய அவளே வாயிற்படியாகும் இருந்தாள் .
நாம் ' வெளியேற ' வேண்டுமென்றாலும் அவள் வழியாகத்தான் வெளியேற வேண்டும் .
வேறு வழி இல்லை .
இல்லறத்திற்குள் நுழைய வாயிற்படி வேண்டும் .
இல்லறத்திற்குள் நுழையப் பெண் வேண்டும் .
நன்மையோ தீமையோ அவள் அனுமதித்தால்தான் வீட்டிற்குள் நுழைய முடியும் .
நன்மையோ தீமையோ அவள் ' கதவை'ச் சாத்திவிட்டால், உள்ளே நுழைய முடியாது.
எனவே நன்மைக்கும் கதவு திறந்து விடுவதும் தீமைக்கு கதவை அடைப்பதும் அவள் பொறுப்பு.
இல்லறத்திற்கு வேண்டியவை எல்லாம் அவள் வழியாகத்தான் வரவேண்டும்.
ஆணுக்கு வேண்டிய கூட அவள் வழியாகத்தான் வரவேண்டும் .
வீட்டில் இருப்பவர்களைக் ' கத ' வடைத்து காப்பதும் அவள் பொறுப்பு .
அவர்கள் வெளியே செல்ல வேண்டிய போது அவர்களுக்கு கதவு திறந்து விடுவதும் அவள் பொறுப்பு.
வீடு கட்டும் போது நிலையைத்தான் முதலில் வைப்பார்கள் . பிறகுதான் சுவர் எழுப்புவார்கள்.
இல்லறத்திற்கு பெண்ணே முதன்மையானவள்
வாயிற்படி குறுகலாக இருந்தால் , நுழைவதும் சிரமும் , வெளியேறுவதும் சிரமம்.
பெண் குறுகிய மனம் கொண்டவளாக இருந்தால் வாழ்க்கையே நரகமாகிவிடும்.
கலவி என்பது வந்த வாசல் வழியாக நுழையும் முயற்சியே .
சொர்க்க வாசலும் பெண்தான் ,
நரக வாசலும் பெண்தான் .
( கவிக்கோ அப்துல் ரகுமான் - பூக்காலம்) - மீள்
ரஹ்மத் ராஜகுமாரன் 944 344 6903 வாட்ஸ் அப் 948 6909 903
கருத்துகள்
கருத்துரையிடுக