#khanbaqavi#baqiyath#கான் பாகவி#இஸ்லாமிய இலக்கிய ஆளுமைகள்
இஸ்லாமிய இலக்கிய ஆளுமைகளின் மாண்புமிகு
தமிழ்த் தொண்டுகள் தொடர் 124
( முஹம்மது கான் பாகவி )
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் 01.07.1954 ல் பிறந்தார். தந்தை பெயர்: அல்ஹாஜ் எம்.எம்.அப்துல் அஸீஸ் கான். தாயார் பெயர்: சாலிஹா பீவி
தந்தை மார்க்கப் பற்றுள்ள சிறந்த மனிதர். மார்க்க அறிஞர்களை மிகவும் மதிப்பவர். தமது குடும்பத்தில் சிறந்த மார்க்க அறிஞர்கள் உருவாக வேண்டும் என்ற தீவிர ஆசையில், ஐந்து ஆண் மக்களையும் அரபி மத்ரசாவிற்கு அனுப்பிவைத்தார்.
அவர்களில் கான் பாகவி அவர்களும். அவருடைய தம்பி மௌலவி, அ. காதர் சையித் மன்பா ஆகிய இருவர் மட்டுமே மார்க்கக் கல்வி முடித்து, ஆலிம்களாயினர். இருவரிலும் மௌலானா அவர்களே மார்க்கப் பணியில் இன்றளவும் ஈடுபட்டுவருகிறார். தந்தையின் தீவிர ஆர்வமும் துஆவும்தான் தாம் ஓர் ஆலிமாக முக்கியக் காரணம் என்கிறார் கான் பாகவி.
உள்ளூரிலேயே பள்ளிப் படிப்பு. அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு எழுதி முடித்த கையோடு அரபி மத்ரசாவில் சேர்ந்துவிட்டார்.
உள்ளூரில் அரபி மற்றும் தீனியாத் (சமயம்) ஆரம்பக் கல்வி கற்ற காலத்திலேயே அவருடைய ஆசிரியர் மர்ஹூம் மெளலானா, அப்துர் கரீம் நூரி (தேவதானப்பட்டி) அவர்களால் ஆலிமாக வேண்டும் என்று தீவிரமாகத் தூண்டப்பட்டார். அதன் விளைவாக அரபிக் கல்லூரிகளின் முதலாமாண்டு பாடநூல்கள் சிலவற்றைத் தம் ஆசிரியரிடம் உள்ளூரிலேயே கற்றுவிட்டார்.
பள்ளிப் படிப்புமீது அவரையும் அறியாமலேயே ஒருவித வெறுப்பும் வளர்ந்துவிட்டது. பத்தாம் வகுப்பை முடித்துவிடு என்று தாய் சொன்னதைத் தட்டிவிட்டோமே என அவர் பின்னாளில் வருந்தியதுண்டு.
இதையடுத்து பழனி அருகே உள்ள கீரனூரில் தமது மார்க்கக் கல்வியைத் தொடங்கினார். மேட்டுப்பாளையம், கூத்தாநல்லூர், வேலூர் ஆகிய ஊர்களில் கல்வி கற்றார்.
1972ல் வேலூர் ஜாமிஆ அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத்தில் 'மௌலவி ஆலிம்' பட்டமும் 1974 ல் மௌலவி ஃபாஜில்' பட்டமும் பெற்றார். பின்னர் உபி. மாநிலம் தேவ்பந்த் 'தாருல் உலூம்' கல்லூரியில் 'தவ்ரத்தே ஹதீஸ்' (நபிமொழி வகுப்பு' பிரிவில் சேர்ந்து சிறிது காலம் பயின்றார்.
அதையடுத்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் 'அஃப்ஸலுல் உலமா' அரபி மொழித் தேர்வில் 1977இல் பட்டயம் பெற்றார்.
கல்வி பயின்ற வேலூர் ஜாமிஆ அம்பாகியாத்துஸ் சாலிஹாத் அரபிக் கல்லூரியில் 1960ஆம் ஆண்டு ஆசிரியராகச் சேர்ந்தார். நஹ்ல் பட்ட வகுப்புவரை பாடங்கள் எடுத்தார்.
முதுநிலை வகுப்புக்கும் பாடம் நடத்தியுள்ளார். பாகியாத்தில் பெரும்பாலும் தத்துவம் பேல்லஃடாட லாஜிக் (மன்தில்) கணக்கு, வாளவியல் போன்ற பாடங்களே நடத்தி வந்தார். குர்ஆன் ஹதீஸ் ஃபிக்ஹா பாடங்கள் நடத்தும் வாய்ப்பு மிகவும் அரிதாகவே அவருக்குக் கிடைத்தது. பாகியாத்தில் 15 ஆண்டுகாலம் பணியாற்றினார்.
கற்றல்,கற்பித்தல்,பேச்சு,எழுத்து, உலகநடப்புகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் நவீன அரபி மொழியில் புலமை என பல துறைகளில் இளமையிலேயே திறன் படைத்தவர்.
பேராசிரியராக தனது பணியைச் சிறப்பாக செய்ததுடன் எழுத்துத் துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
பேராசிரியராகப் பணியாற்றிய கால கட்டத்தில்
மாணவர்களுக்குப் பாடநூல்களைப் போதிப்பதோடல்லாமல் பேச்சு எழுத்து இலக்கியம் ஆகிய துறைகளிலும் மாணவர்களுக்கு ஆர்வமூட்டி வந்தார்.
உலக நடப்புகள், நவீன அரபி, பத்திரிகைத் துறை ஆகியவற்றிலும் மாணவர்களின் கவனத்தைத் திருப்பி வந்தார். மாணவர்களிடையே சுயமரியாதை
தன்னம்பிக்கைப் போக்கை ஊக்குவித்தார். இதனாலேயே இன்றும் அவரிடம் கற்ற மாணவர்கள் பலர் அவர் மீது அதிகப் பாசம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
لكل فن رجال
"ஒவ்வொரு துறையிலும் சில நிபுணர்கள் இருப்பார்கள்" என்கிறது அரபு பழமொழி.
அல்லாஹ், தான் விரும்புபவர்களுக்கு நுண்ணறிவை வழங்குகிறான்" என்கிறது குர்ஆன்.
அத்தகைய நிபுணத்துவமும் நுண்ணறிவும் வாய்க்கப் பெற்ற மார்க்க ஆளுமை தான் கான் பாகவி என அழைக்கப்படும் 'பேராசிரியர் அப்ஃஸலுல் உலமா முஹம்மது கான் பாஸில் பாகவி அவர்கள்.
அக்காலத்தில் தமிழ் நாளிதழ்களில் பாமர மக்கள் வாசிப்பது தினத்தந்தி, படித்தவர்கள் வாசிப்பது தினமணி என்பார்கள்.
பல லட்சம் வாசகர்களைக் கொண்ட தினமணியின் ஆசிரியராக ஏ.என்.எஸ்.என அழைக்கப்பட்ட ஏ.என்.சிவராமன் அவர்கள் இருந்தார்.அவரின் தலையங்கமும் உலக நடப்புகளைப் பற்றிய அவரின் கட்டுரைகளும் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருக்கும். தினமணியில் வரும் வாசகர் கடிதமும் மக்கள் விரும்பி வாசிக்கும் வகையில் சிறப்பான கடிதங்களே வெளியாகும்.
அதில் அரபுக்கல்லூரி பேராசிரியர் என்ற அடையாளத்துடன் கான் பாகவி அவர்கள் ஆசிரியர் ஏ.என்.எஸ் அவர்களின் கட்டுரைகளை விமர்சித்து எழுதும் கடிதத்திற்கு ஆசிரியர் முன்னுரிமை கொடுப்பார் சில நேரங்களில் 'பாகவி'யாரின் கடிதத்தைத் தனியாக கட்டம் கட்டி வெளியிடுவார்.
ஆலிம் களுக்கு பிழையின்றி நல்ல தமிழில் பேசவோ எழுதவோ வராது எனச் சொல்லப் பட்ட கால கட்டத்தில் எளிய நடையில் அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் நல்ல விஷய ஞானத்துடன் எழுதும் ஆற்றல் படைத்தவராக இருந்தார்.
எழுத்துத் துறையைப் பொறுத்தவரையில் 1977 ஆம் ஆண்டிலேயே இவரது முதலாவது எழுத்து அச்சிலேறிவிட்டது தினமணி தினகரன், மாலை முரசு போன்ற பிரபல நாளேடுகளில் இவரது கட்டுரைகள், கடிதங்கள் வெளி வந்துள்ளன.
மணிச்சுடர், மறுமலர்ச்சி, சமரசம், முஸ்லிம் முரசு, ரஹ்மத்
ஜமாஅத்துல் உலமா, சிராஜ். இஸ்மி, குர்ஆனின் குரல், சமநிலைச் சமுதாயம் உள்ளிட்ட சமுதாய ஏடுகளில் இவருடைய தொடர் கட்டுரைகளும் தனிக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. மலேசியா நம்பிக்கை மாத இதழிலும் இவர் எழுதியுள்ளார்.
சென்னை ரஹ்மத் அறக்கட்டளை ஏழு மார்க்க அறிஞர்களைக் கொண்ட குழுவினர் மூலம் குர்ஆன், ஹதீஸ் கருவூலங்களை தமிழாக்கப் பணியை மேற்கொண்டது.
வேலூரில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டே மேற்கண்ட பணியில் கான் பாகவி மேலாய்வாளராக இருந்தார்.
ஸஹீஹூல் புகாரியின் மூன்று பாகங்கள் வெளியான நிலையில் ரஹ்மத் அறக்கட்டளையினரின் நீண்ட நாள் தொடர் வேண்டுகோளை ஏற்று தாம் நீண்ட நெடுங்காலம் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் பணியை பிரிய மனமின்றி பெரும் தயக்கத்துடன் ராஜினாமா செய்து விட்டு, திருத்தூதரின் பொன்மொழிகளைப் பரப்ப வேண்டும் எனும் தூய எண்ணத்துடன் மொழிபெயர்பாளர்கள் குழுவின தலைவராக இணைந்தார்.
மவ்லானா கான் பாகவி அவர்கள் முழு நேர மேலாய்வளராகப் பொறுப்பேற்ற பின் ஹதீஸ்களை அரபிலிருந்து தமிழில் மொழிமாற்றம் மட்டும் செய்யாமல் நபிமொழிக்கான விளக்கத்தையும் சுருக்கமாக விளக்கும் அடிக்குறிப்பு என்ற நடைமுறையை உருவாக்கினார்.
மூல மொழியின் அடிப்படை கருத்துமாறாமல் சிக்கலான வாக்கிய அமைப்பின்றி எளிய தமிழ் நடையில் தமிழாக்கம் செய்வது தான் பாகவி அவர்களின் குழுவினரின் தனிச்சிறப்பு.
இவரது மேலாய்வில் இதுவரை ஸஹீஹுல் புகாரி தமிழாக்கம் ஏழு பாகங்களும் ஸஹீஹ், முஸ்லிம் தமிழாக்கம்
நான்கு பாகங்களும், தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் பத்து பாகங்களும், ஜாமிஉத் திர்மித் தமிழாக்கம்
மூன்று பாகங்களும் வெளிவந்துள்ளன.
தற்போது ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷனில் முஸ்னது
அஹ்மத் தமிழாக்க மேலாய்வாளராக பணியாற்றிவருகிறார்
இவருடைய குழுவில் பாகவிஅவர்களுடன் இருபதாண்டுகளுக்கு மேலாக இணைந்து பணியாற்றிவரும் மெளலவி,ஹாபிஃழ் அப்ஃஸலுல்உலமா சா.யூசுப் சித்தீக் மிஸ்பாஹி.M.A.M.phill அவர்களும்,
மெளலவி,ஹாபிழ் அப்ஃஸலுல்உலமா சா.அப்துல்லாஹ் பாகவி M.A.,M.P.hill அவர்களும்
இணைந்து பணியாற்றி வருகிறார்கள்
இதுவரை பாகவி அவர்கள் ஆற்றிவந்த பணிகளில் மிகப் பெரிய பணி முஸ்னத் அஹ்மத் ஹதீஸ் நூல் தமிழாக்கப் பணியாகும்.
ஏனென்றால் முஸ்னத்அஹ்மத் மூலமொழியான அரபி மொழியிலேயே 12 பாகங்களைக் கொண்டது. 14 அத்தியாயங்கள்,1306 பாடங்கள்,26363 நபிமொழிகள் இடம் பெற்றுள்ள பெருநூல்.
இதுவரை மூன்று பாகங்கள் சிறந்த அடிக்குறிப்புகளுடன் வெளியீடப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு நூல்கள் மட்டுமின்றி 12க்கும் மேற்பட்ட பல தலைப்புகளில் ஆய்வு நூல்களை பாகவி அவர்கள் எழுதியுள்ளார்.
1 ஹினால் - மாத இதழ் (1986 - 1988)
2 மனாருல் ஹுதா - மாத இதழ் (1993 - 1999)
ஆசிரியராக பத்திரிக்கை துறையிலும் பயணித்திருக்கிறார்.
பல்வேறு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்களில் இவர் உரை
நிகழ்த்தியுள்ளார். சென்னையில் பல பள்ளிவாசல்களில் ஜும்ஆ உரை ஆற்றிவருகிறார்.
1976 முதல் நூற்றுக்கணக்கான கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். இவரது மார்க்க உரைகள், கேள்வி - பதில்கள், பேட்டிகள் சன் டி.வி. ஜெயா டிவி விஜய் டி.வி,
ராஜ் டிவி தமிழன் டிவி, வின் டிவி ஆகிய தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளன.
லண்டன் தீபம் தொலைக்காட்சியில் கடந்த 2002 பிப்ரவரி முதல் இவரது உரைகள் ஒளிபரப்பாயின்.700-க்கும் மேற்பட்ட தொடர்கள் வந்துவிட்டன, தூர்தர்ஷன் பொதிகையிலும் இவரது உரை இடம் பெற்றிருக்கிறது.
வெளிநாடு பயணங்கள்
1) 1991 அபுதாபி துபாய் நாடுகளிலிருந்து வந்த அழைப்பின் பேரில் மார்க்கச் சொற்பொழிவு
2) 1996 சிங்கப்பூர் ஷரீஅத் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்,
3) 1994 சிங்கப்பூர் நபிமொழித் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பங்கேற்பு
4) 2000 சிங்கப்பூர் திருவிதாங்கோடு முஸ்லிம் யூனியன் (TMU) கூட்டங்களில் பங்கேற்பு
5) சவூதி 6 குவைத் 7. மலேஷியா 8. இலங்கை 9. பாங்காக்
மவ்லானா கான் பாகவி அவர்களின் சேவையைப் பாராட்டி
1993இல் அய்யம்பேட்டையில் நடந்த திருக்குர் ஆன் மாநாட்டில் ரூ. 2500 பொற்கிழியும்," எழுத்துலகின் இளைய தலைமுறை கேடயமும் " இவருக்கு வழங்கப்பட்டன.
இப்படி மௌலானா கான் பாகவி அவர்களின் சேவைப் பயணம் எவ்வித இவ்வுலக எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி தொடர்கிறது.
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வேகம் பாகவியிடம் தெரிகிறது. தாம் மட்டுமன்றி தம் சமுதாயமும் ஆலிம்களும்
முன்னேற வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் பளிச்சிடுகிறது.
கல்வி பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் சமுதாயம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற நோக்கில் 2000ஆம் ஆண்டில் இஸ்லாமியர் விழிப்புணர்வுக் கழகம் என்ற அமைப்பை மற்ற ஆலிம்களுடன் சேர்ந்து ஆரம்பித்து சமூக சேவை ஆற்றிவந்தார்.
தற்போதும் பல கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்து வருகிறார்.
அவரது பயணம் தொடர, இலட்சியங்கள் வெற்றிபெற அவரால் சமுதாயம் தொடர்ந்து பயன்பெற துஆச் செய்வோம்.
ரஹ்மத் ராஜகுமாரன் 944 344 6903 , வாட்ஸ் அப் 948 690 9903
கருத்துகள்
கருத்துரையிடுக