ஜாபிர் பாகவியின் கவிதை
இந்த கவிதை பாக்கியத்தில் ஓதும்போது எழுதியது.
கர்பலா தேசத்துக் கரிகாலன்!
=================================
எண்ணை வயல்களுக்காக
என்னவெல்லாம் செய்யலாம்?
பொய்ப்பிரச்சாரம்
பொருளாதாரத் தடை
பாலும் மருந்துமின்றி
பாலகர்களையும் சாகடித்தல்!
உணவு தடுத்து
உயிர் குடித்தல்
நாட்டு மக்கள் மீது
நள்ளிரவில் குண்டு வீசுதல்!
அப்பாவிகளை அகதிகளாக்குதல்
அல்லது
எரித்துச் சாம்பலாக்குதல்!
எண்ணை வயல்களுக்காக
என்னவெல்லாம் செய்யலாம்?
பதுக்கி வைத்திருந்த
பேரழிவு ஆயுதங்கள்
அமெரிக்க ஆக்கிரமிப்பால்
வெளிச்சத்துக்கு வந்தன.
ஆம்,
அமெரிக்கா பதுக்கி வைத்திருந்த
பேரழிவு ஆயுதங்கள்
இரவிலும் பகலிலும்
இராக் மக்கள் மீது
வீச வேண்டி வந்ததால்
வெளிச்சத்துக்கு வந்தன.
அமெரிக்க டிராகுலாக்கள்
எண்ணையை மட்டுமல்ல
எதிரி நாட்டு மக்களின்
இரத்தத்தையும் உறிஞ்சும்.
தன்னாட்டு யூதர்களின்
வயிற்றை நிரப்ப
பன்னாட்டு மக்களின்
வயிற்றிலடிப்பது
வல்லரசுக்கு புதிதல்லவே
சுடரை ஏந்தியபடி
சுதந்திரதேவி என்னும்
சூட்டு பெயரோடு
அரபு-ஆசிய நாடுகளில்
வீதி வீதியாக
விலைமகளாகத் திரியும்
அமெரிக்கத்தனத்தை
வாரி அணைத்து
விளக்கணைக்கும்
ஆட்சியாளர்களுக்கு மத்தியில்
தன் நாட்டினுள்
வரவிடாமல்
விலக்கி வைத்த
சீர்திருத்தவாதி தான்
சதாம்!
பெட்ரோல் தேசங்களெல்லாம்
வாள்பிடிக்க வலுவின்றி
வாடகை படைகளுக்காக
வல்லரசின்
வால் பிடித்து தொங்குகையில்
அல்லாஹ்வின் அருளை நம்பி
சொந்தமாக ராணுவம் அமைத்து
ஏகாதிபத்தியத்தை எதிர்த்த
ஏகத்துவவாதி சதாம்!
அரபிகளுக்கே உரித்தான
அக்மார்க் சோம்பலுடன்
அமெரிக்கனின் காலடியில்
வீழ்ந்து கிடக்கயில்
முஸ்லிம்களுக்கே உரிய வீரத்துடன்
ஆணவத்திற்கெதிராக
ஆர்த்தெழுந்த அரிமா சதாம்!
புதுப்புது பித்அத்
புதைகுழிகளில் மூழ்கி
இஸ்லாமிய வரலாற்று சின்னங்களுக்கு
கல்லறை கட்டிய
கருங்காலிகளுக்கு மத்தியில்
அவற்றை
கல்லணை கட்டிக் காப்பாற்றிய
கரிகாலன் சதாம்!
அமெரிக்காவை அனுசரித்து
ஆடம்பர மாளிகையில்
மதுவோடும் மங்கையோடும்
மயங்கிக் கிடக்காமல்
பதுங்கு குழிகளில்
பட்டினியோடு
பரிதவித்த போராளி
சதாம்!
அமெரிக்காவே! அமெரிக்காவே!
சதாமை சாய்த்தேன் என
அதிகம் மகிழாதே!
கர்பலா காலத்திலிருந்தே
ஈரமாகத்தான் இருக்கிறது
ஈராக் மண்!
சமுதாயத்தில்
சதாம்கள் இன்னும்
இருக்கிறார்கள்
சதாமின் சமாதியில்
புல் முளைக்கும் முன்னே
புரட்சி முளைக்கும்
நீ தூக்குக் கயிற்றை வீசினாய்
சர்வாதிகாரி எனும்
அடைமொழியோடு
அழைக்கப்பட்டவரை
மாவீரன் எனும்
தொலைதூரத்துக்கு
தூக்கிச்சென்றது
தூக்குக் கயிறு
நாய்க்கு நீர் புகட்டிய
நற்செயலைப் பொருந்திக் கொண்ட
மன்னிக்கும் மாண்பாளன் அல்லாஹ்
கொள்கை குழம்பிடாத
ஸன்னி சதாமுக்கு
சுவனம் நல்கப் போதுமானவன்.
==================================
ஜாபிர் பாக்கவி
கருத்துகள்
கருத்துரையிடுக