கராமத்து

கராமத்துகள் ஒரு பார்வை.......

.

ஈராக் நாட்டில் கஸ்பியன் கடலுக்கு தெற்கிலுள்ள தபரிஸ் தான் மாநிலத்தின் ஜீலான் நகரில் பிறந்தவர்கள் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி என்ற இஸ்லாமிய இறைஞானி. இவர்கள் (கி.பி.1077- 1165) 91 ஆண்டுகாலம் உலகியல் வாழ்வை நிகழ்த்தியவர். 18ம் வயதில் பகுதாதிற்கு புறப்பட்ட ஆண்டகை 30 ஆண்டுகள் கல்விமுயற்சிகளிலும் கடுந்தவப் பெருக்குகளிலும் ஈடுபடுத்திக் கொண்டார்கள் .

சூபித்துவத்தின் பாட்டையில் நிகழ்த்திய முகியத்தீன் ஆண் டகையின் பெரும்பயணம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. பக்தாது நாட்டின் தலை சிறந்த கலைக்கூடங்களில் மார்க்க கலைகளை கற்ற முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரழி) அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள் புகழ்பெற்ற உரை களாகத் திகழ்கின்றன. பிற்காலத்தில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி  (ரஹ்) நிகழ்த்திய அற்புதங்கள், வாழ்வின் நிகழ்வுகளாக சொல் மற்றும் செயல்களில் அமையப் பெற்றுள்ளன. தமிழ்ச்சூழலில் இக்கராமாத்துகள் குறித்து அப்துற்றஹீம் தனது ஆக்கங்களிலும் விரிவாக ஏழுதியுள்ளார். நயினா முகம் மது ஆலீம் சாகிபவர்களிடம் உரை வாங்கி பக்கீர் மதாருப் புலவர் இயற்றிய முகியத்தீன் மாலை பாடல்களிலும் கராமாத்துகள் விவரிக்கப்படுகிறது.

முகியத்தீன் அப்துல்காதிர்  ஜீலானி (ரழி) அவர்கள் தாய் வயிற்றிலிருக்கும் நாளில் நடந்த காரணம், துகிலுடுத்திப் பிறந்த காரணம், மரணித்த மடமானுக்கு உயிர்கொடுத்தது, அசூயையான கரத்தை சுகமாக்கியது, திருடனை ஞானியாய் மாற்றியது, 12 வருஷம் போன கப்பலை தரையிலழைத்தது, ஜின்னை கூலிலடைத்தது என எண்ணற்ற கராமாத்துகள் இந்த நூலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் மேற்குப் பிரதேசங்களில் ஒன்றான ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீரில் அடங்கப்பெற்றுள்ள ஹஜ்ரத் ஹாஜா முகீனுத்தீன் சிஸ்தி கி.பி1192ல் இந்திய மண் ணுக்கு தனது சீடர்கள் குழுமத்தோடு வந்தவர்கள் இஸ்லாத்தின் மூலம் சமத்துவம், மனத்தூய்மை, அன்பு, மக்கள் சேவை கருத்தாக்கங்களை நடைமுறைப்படுத்தியவர்கள். மவ்லவி டி.ஏப்.ரஹ் மத்துல்லா அலி ஸாஹிபு பாகவி அவர்கள் சிஸ்தியின் ஜீவிய சரிதையை எழுதியுள்ளார். இது சென்னை, திருவல்லிக் கேணி ஹாஜி எம்.ஐ.ஷாஹூல் ஹமீது அவர்களால் 1963ல் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்தி நிகழ்த்திய கராமாத்துகளும் இந்நூலின் ஒருபகுதியாக தொகுக்கப்பட்டுள்ளன.

அஜ்மீர்மன்னன் நியமித்த அஜய்பால் என்ற மந்திரவாதி ஹாஜா முயீனுதீன் சிஸ்தியை பணியவைப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபடுகிறான். மிருகச்சாலா என்றொரு மான் தோல் ஆசனம் அவனிடமிருந்தது. அதை மந்திரம் சொல்லி எறிய தலையில் படாமல் அந்தரத்தில் பறந்து வந்தது. அதில் அவன் அமர்ந்து ஆகாயத்தில் பறக்கிறான். அதை எதிர் கொள்ள ஹாஜா முயீனுதீன் சிஸ்தி தமது பாதக்குறடாகிய கால்கட்டையைக் கழற்றி ஏவி விட அதுவும் ஆகாயத்தில் அந்தரமாக பறந்து சென்று அந்த மாயமான் தோல்மீது அமர்ந்து அழுத்தியது. மான்தோல் ஆசனம் மடங்கி தரையில் விழுந்தது. தொடர்ந்து பாதக்குறடு அஜய்பாலின் தலையில் தாக்க தரையில் வீழ்கிறான். சிஸ்தியின் ஞானஆற்றலை கண்ணுற்ற அஜய்பால் அவர்களிடம் கருணைக்காட்டச் சொல்லி முஸ்லிமாகிறான். அஜ்மீரின் ராய்பத்தூரா எனப்பட்ட பிரித்விராஜ் மன்னனுக்கு எதிரான ஒரு சாதுவான பக்கீரின் கலகங்களாக இக்கராமாத்துகளில் பலவற்றை மதிப்பிடலாம்.

தமிழக மக்களால் நாகூர் ஆண்டவர் என புகழப்படும் மீறான் சாகிபு ஆண்டவர் என்னும் அப்துல்காதிர் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம், வடஇந்திய எல்லையான மாணிக் கப்பூரில் தோன்றியவர்கள். கிபி 1490ல் 68 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த அவர் தனது இறுதி 28ஆண்டுகளில் தமிழகத்தின் நாகூரில் தங்கியிருந்து சேவை புரிந்து மரணித்தப் பின் அங்கேயே அடங்கப்பட்டிருக்கிறார். நாகூர் தர்கா என்ற பெயரில் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளமாக அது நிகழ்கிறது. பல்சமயத்தினரும் பங்கு கொள்ளும் தர்கா நிகழ் வுகள் மாறுபட்ட நல்லிணக்க இழைகளைக் கொண்டுள்ளது.

நாகூரின் பெரும்புலவர் வா.குலாம்காதிறு நாவலர் ஷாகுல்ஹமீது பாதுஷா அவர்கள் மீது நாயகத்தின் வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்து 1902ல் முதன்முதலாக அச்சுவடிவில் வெளிக் கொண்டு வருகிறார். அற்புதப் புதையல் எனப் பொருள் படும் கன்ஸுல் கராமாத்து பெயரிலான அந்த நூல் 131 அத்தி யாயங்களையும், 576 பக்கங்களையும் கொண்ட மிகப் பெரிய நூலாகும். பிறப்புக்கு முன்னும், பிறப்பிற்கு பிறகும், உயிர் வாழ்ந்த காலங்களிலும், இறப்புக்கு முன்னும், இறப்பிற்குப் பிறகும் நாயகம் (ஸல்-அம்) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களைப் பேசும் நூலாக இது உள்ளது.  சம்பவ விளக்கங்களும், வருணனை வார்த்தைகளும் கொண்ட இந்த மூலநூலிலிருந்து முக்கியப் பகுதிகளை பிழிந்தெடுத்து சுருக்கமாக்கி ரவீந்தர் என்ற திரை வசனகர்த்தாவான புனைபெயருடைய செய்யது ஹாஜா முகையதீன் 1963ல் கன்ஜுல் கராமாத்து கருணைக்கடல் என்ற தலைப்பில் வெளியிடுகிறார்.

மீறான் சாகிபு ஆண்டகை அவர்களின் அற்புதங்கள் பொதிந்துள்ள தமிழ்ப் புராணங்களும், பிரபந்தங்களும் அனந்தமுண்டு. இவற்றுள் அநேகம் பெரும்புலவர் பெருந் தகை தறுகா மகாவித்துவான் வா.குலாம்காதிறு நாவலர் அவர்களாலே வெளிக்கொணரப்பட்டன. கன்ஜுல் கராமாத்து என்னும் கிரந்தம் அப்புராண பிரபந்தங்களில் நின்றே பெயர்த்துக் கொணரப்பட்டது. அது எல்லோராலும் எளிமையில் உணரத்தக்க வசனகாவியமாக அமைந்துள்ளது. அதனை வடிகட்டித் திரட்டியதே இந்த கருணைக்கடல் என்ற அற்புதப்புத்தகம் என்பதாக அந்நூலின் முன்னுரையில் மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர் வா.கு.மு.ஆரிபு நாவலனார் குறிப்பிடுகிறார்.

ஓசையைக் கொண்டு சொல் பிறந்தது. ஒவ்வொரு சொல்லிலும் முஹம்மது என்ற பதமே மறைந்திருப்பதாக சீக்கிய மதத்தலைவர் குருநானக் அவர்கள் ஓர் கணக்கில் சொல்லியி ருக்கிறார்கள். எல்லா மொழியின் எழுத்துக்கும் ஒவ்வொரு தனி இலக்கணமுண்டு. இதை அரபியில் அப்ஜத் கணக்கு என் கிறார்கள். இக்கணக்குப்படி முஹம்மது என்ற சொல்லின் மொத்த இலக்கம் 92. இந்நூலில் அவர்களது அருளும் பொலிவும் அடங்கி இருக்கவேண்டும் என்று இதை 92 அத்தியாயங்களாக எழுதினேன் என்பதாக இந்நூலை சுருக்கி செய்யது ஹாஜா முகையிதீன் குறிப்பிடுகிறார்.

ஷாகுல் ஹமீது நாயகம்

வாய்மொழிbவரலாறு-1

மகான் பீர்முகமது சாகிபு அவர்கள் வாழ்ந்து வந்த  காலத்தில் அவரகளை, இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி தெரியாதவரென்றும், தொழாதவரென்றும் சிலர் பழிசொல்லி தூற்றினர். இந்நிலையை தெளிவுபடுத்தவும், மக்களை குழப்பத்திலிருந்து மீட்கும் பொருட்டும் அப்போது மார்க்க மேதையாக எல்லோராலும் அறியப்பட்ட காயல்பட்டணத்தைச் சார்ந்த ஹலரத்து சதக்கத் துல்லா அப்பா அவர்களுக்கு திருமுக பாசுரமெழுதி இப்பிரச்சினையை தீர்க்க வருமாறு அழைத்தனர். சதக்கத்துல்லா அப்பா புறப்பட்டுவருவது பீரப்பாவிற்கு தெரிந்ததும் காயல்பட்டணத்திலிருந்து என்னைக்காண ஒரு வர் வருகிறார். நம்மால் இயன்றதை அவருக்கு செய்ய வேண்டும், சீக்கிரம் சமைத்துவிடு என்று தன் துணைவியாரிடம் கூறுகிறார். அதற்கு அவர்கள் வீட்டில் ஒருபிடி அரிசியு மில்லை என்ன செய்வது என்று கேட்க, பீரப்பா வீட்டில் தான் அரிசியில்லை, தெருவில் மண்ணுமா இல்லை? நாலு பிடி மண்ணையள்ளி ஒரு பானையிலிட்டு தண்ணீர் வார்த்து அடுப்பெரிய விடு. ஒரு சட்டியில் சப்பாத்திக் கள்ளிகளை துண்டுகளாக அறுத்து தண்ணீர் ஊற்றி வேகவை என்று கூறினார்கள். பீரப்பா சொன்னதை அப்படியே செய்து அடுப்பெ ரித்துக் கொண்டிருந்தார்கள். பீரப்பாவோ தறிக்குழியில் இறங்கி துணி நெய்து கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் ஹலரத்து சதக்கத்துல்லா அப்பா அவர்கள் பீரப்பாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். அங்கு வந்து பீரப்பாவைப் பார்த்து நீங்கள் இந்த ஊரில் ஒரு முஸ்லிமாக இருந்தும் அல்லாஹ்வைத் தொழாமலும், பள்ளிக்குப் போகாமலும் இருக்கிறீர்களே இது சரியா என்று கேட்க, பீரப்பாவோ சதக்கத்துல்லா அப்பாவை பார்த்து தம்பி ஐந்துவேளையும் இந்தப் பள்ளியில் தொழுவது சிறப்பா அல்லது மக்காவி லுள்ள கஃபத்துல்லாவில் தொழுவது சிறப்பா, நான் தொழுததை நீங்கள் பார்க்க வேண்டுமானால் இதோ நான் நிற்கின்ற காக்குழியைப் பாருங்கள் என்றார்கள். ஹலரத்தவர்கள் காக் குழியை உற்றுப் பார்த்தபோது அங்கே கஃபா தெரிந்தது. அங்கே இமாமாக நின்று பீரப்பா தொழுவித்துக் கொண்டிருந் தார்கள். சதகத்துல்லா மெய்சிலிர்த்துப் போகிறார்கள்.

பின்னர் பீரப்பா சதக்கத்துல்லா அப்பாவை சாப்பிட  வீட்டிற்குள் அழைத்து வந்தார்கள். அடுப்பிலிருந்து இறக்கி வைக்கப்பட்ட பானையிலுள்ளதையும், சட்டியிலுள்ளதை யும் எடுத்து வைத்திட இருவரும் சாப்பிட உட்கார்ந்தனர். பசியாறுங்கள் தம்பி ஏன்று சொல்லியும் சதக்கத்துல்லா அப்பா சாப்பிடாமல் இருந்தார்கள். பீரப்பாவோ என்ன தம்பி சோறுண்ணச் சொன்னால் சும்மா இருக்கிறீர்கள்? மண் ணும் கள்ளியுமாக இருக்கிறதோ? அல்லாஹுத்த ஆலாவை உணர்ந்து அவன் பாதையை பற்றிப் பிடித்தவர்களுக்கு அவன் கொடுத்திருக்கும் அதிசய ஆற்றலை பார்த்தீர்களா என்று கூறி அவர்கள் முன்னிருந்த சாப் பாட்டை தன் கையால் தொட்டு, மண்ணையும் கள்ளியையும், நெய்ச்சோறும் கறியுமாக்கி அள்ளியள்ளி சதக்கத்துல்லா அப்பா அவர் களின் வாயில் ஊட்டினார்கள்.

தெளிவுகள்:

மேற்சொல்லப்பட்ட வாய்மொழி வரலாற்று சம்பவ நிகழ்வு என்பது மேற்தள கட்டமைப்பாகவும் அதில் உட்பொதிந்துக் கிடக்கும் கருத்தியல் அடித்தள கட்டமைப்பாகவும் அமையப் பெற்றுள்ளது. இதில் உட்பொதிந்து கிடக்கும் கருத்தியல் களை அல்லது உண்மையின் நுண்அலகுகளை நாம் கீழ் கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

பீரப்பாவும், சதக்கத்துல்லா அப்பாவும் சமகாலத்தை சேர்ந்தவர்கள். பீரப்பா மூத்தவராகவும், சதக்கத்துல்லா அப்பா இளையவராகவும் சுட்டிக் காட்டப்படுகின்றனர். இதற்கான துணைவிளக்கத்தை அவர்கள் தம் வரலாற்று கால கட்டத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளலாம். சதக்கத்துல்லா அப்பாவின் காலம் 1632 - 1705 ஆகும். பீரப்பா காலம் குறித்து சரியான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை. எனினும் திருநெறிநீதம் நூலில் குருநபி ஹிஜ்ரத்தாகி குவலகத்தா யிரத்தின் இருபத்துரண்டாமாண்டிலியம்பிடும் ரபியுலாஹிர் கருமமென்றிருபதன்று காரணவெள்ளிநாளில், திருநெறி நீதம்பாட திருவருள் பெருகத்தானே என்று குறிப்பிடுவதால் ஹிஜ்ரி 1022ல் இந்நூல் உருவானதாக அறியலாம். எனவே ஏறத்தாழ கி.பி.1570-1670க்கும் இடைப்பட்டதாகக்கூட பீரப்பாவின் காலத்தை வரையறுக்கலாம். இதனடிப்படையில் வயதில் முதிர்ந்த பீரப்பாவை, இளையவரான சதக்கத் துல்லா அப்பா சந்தித்திருக்க வாய்ப்புள்ளதாக அறியலாம்.

(2) சதக்கத்துல்லா அப்பாவிடம் தறி நெய்யும் காக்குழியில் கஃபதுல்லாவை காண்பித்து அங்கே இமாமாக தொழுகை நடத்தியதாக வரும் பகுதி பிற இஸ்லாமிய மார்க்கஞானிகளைவிட ஆற்றலிலும் மார்க்கஞானத்திலும் சிறந்தவர் பீரப்பா என்னும் நிலையை உணர்த்த முற்பட்ட குறியீடாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

(3) தென்திருவிதாங்கூரின், பத்மநாபபுரம் அரண்மனை பட்டு நெசவு தேவைகளுக்கு இப்பகுதி நெசவாளர்கள் நெய்து கொடுப்பதான செய்தி உண்டு. எனவே அன்றைய முஸ்லிம் குடும்பங்கள் மேற்கொண்ட நெசவுத் தொழி லோடு பீரப்பா வாழ்க்கை நடத்தியிருக்கக்கூடும் என்பதற்கான அத்தாட்சியாக காக்குழி பற்றிய படிமம் இடம் பெற்றிருப்பதாக கருதலாம்.

(4) உலகியல் வாழ்வில் ஏளிமையாகவும், ஏழ்மையோடும் பீரப்பா வாழ்ந்தார்கள் என்பதற்கான கூறுகளை, சோறாக்க ஒருபடி அரிசியில்லை என பெறப்பட்ட கூற்றின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம். பீரப்பாவின் ஞானப் புகழ்ச்சிப் பாடல்கள் பல இடங்களில் வறுமை, துன்பம், தீங்கு என அனைத்திலிருந்தும் விடுபட இறைவனை இறைஞ்சிப் பாடுவதைப்பார்க்கலாம். (பொல்லாகுபிர்களும் வருங் குற்றமும்), பொருந்தா பிணிதுன்பம் பல ஆபத் தும், நில்லா வறுமையும் மனச்சலிப்பும், நினைப்பும் மறப் பும் வந்தெய்திடாமல் (பாடல் எண்: 102) புவிக்குள் பசித்தவர்க்கென்று ஈயாதலுத்தரையும் ஏன் படைத்தாய் எம்மிறைவனே (பாடல்:9) ஏழை யடியார்க்கு இரங்கும் அல்லாஹ்வே எங்கள் வேளை யறிந்துதவும் மேலோனே (பாடல்:475) இதுபோன்ற பல பாடல்வரிக் குறிப்புகளைக் கூறலாம்.

(5) பீரப்பாவின் அகவாழ்க்கை அதாவது மணஉறவு குடும்ப உறவு பற்றிய தகவல்கள் எதுவுமில்லை. ஆனால் ஆனைமலைக்கு அருகில் பீர்மேடு என்னும் மலைப்பகுதியில் இறைதியானம் என்ற வகையில் பீரப்பா தவம் புரிந்தார் என்பதற்கான செவிவழிச் செய்திகள் உண்டு. இதற்கான துணை ஆதாரமாக பீரப்பா பாடிய முஹ்யித்தீன் ஆண்டவர் மீதான உணர்வுகளை வெளிப்படுத்தும் ஞானக்குறம் பாடல் தொகுப்பின் மலைவளம், நாட்டுவளம், வாசல் வளம் உள்ளிட்ட பகுதிகளை குறிப்பிடலாம். ஏனெனில் ஒருவித வாழ் வனுபவமும் உணர்தலின் புரிதலின் அடிப்படையிலேயே இப்பாடல்கள் உருவாகியிருக்கக்கூடும். ஞானப்புகழ்ச்சியின் மலைமேடு சிறிது- எங்கள் மனமேடு பெரிது (பாடல்: 126) பாதங்கள் மேலுங்கீழுமாய் பத்து நூறாயிரமாண்டு ஓதித்தவம் செய்தாலும் போதாதாம் அன்றுகந்ததுக்கே (பாடல் :29) என்பது போன்ற குறியீடுகள் இடம் பெறுவதைக் கவனத்திற் கொள்ளலாம்.

இந்நிலையில் இல்லறத்தை மறுத்து துறவறத்தை பீரப்பா வலியுறுத்தினார், இது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமானது என்று ஒரு சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் இல்லறத்தை நிராகரிக்கச் சொன்னதற்கான ஆதாரங்கள் எதையும் பீரப்பாவின் பாடல்களிலிருந்து எடுத்துக்காட்ட முடியாது. பீரப்பாவின் துணைவியார் சதக்கத்துல்லா அப்பா விற்கு சமைத்து வைத்தார்கள் என்ற வாய்மொழி வரலாற்றுச் செய்தியை மறுப்போரும் உண்டு என்றாலும், இஸ்லாம் பேசும் குடும்ப வாழ்க்கையை பீரப்பா மறுக்கவில்லை என் பதற்கான ஆதாரமாகவும் இதைக் கருதலாம். உடலியல் ஞானம்,ஆண்பெண் உறவு பற்றிய படிமங்கள் சிலவும், ஆன்மீக தத்துவார்த்த விளக்கச் சொல்லாடல்களாகவும் பீரப் பாவின் ஞானரத்தின் குறவஞ்சியிலும் இடம் பெறுகிறது.

மேலும் பீரப்பா பீர்மேட்டில் தவம்புரிந்தார்கள் என்ற செய்தியின் மூலமாக அக்காலத்தில் இறையைப் பற்றியும், மனித குலம் மீட்சி பெறுதல் குறித்த ஞானத்தையும் பெற பீரப்பா தனிமையை விரும்பி தனித்து சிந்தித்து தவம்புரிந்து வாழ்ந் திருக்கக்கூடும். இது துறவறம் சார்ந்த விஷயமல்ல. தனிமை சார்ந்த விஷயம். நபிமுஹம்மது ஸல்-அம் அவர்கள் தன் வாழ்க்கையில் நபித்துவம் பெற்றதும், இறைத்தூது (வஹி) ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வழி நபி முஹம்மது ஸல்-அம் அவர்களுக்கு  கிடைத்ததும் ஹிரா மலைக்குகையில் தனித்திருந்த போது தான் என்பது இவ்வேளையில் நினைவுகூரத்தக்கது.

வாய்மொழி வரலாறு - 2

பீரப்பாவின் ஞானத்தை சோதிக்க திருவிதாங்கூர் மன்னன் அரச சபைக்கு பீரப்பாவை அழைத்து வரச் செய்கிறான். அறிஞர்கள் நிறைந்திருந்த அந்த அவையில் மன்னன் நீரில் மீன் இருக்குமா என்று பீரப்பாவிடம் ஒரு கேள்வி கேட்கிறான். ஆம், நீரில் மீன் இருக்கும் என்று பதில் கூறுகிறார்கள். உடனே ஏளனத்தோடு மன்னன் சிப்பந்தியை அழைத்து தென்னை மரத்திலுள்ள தேங்காயைப் பறிக்கச் சொல்கிறான் பறித்த தேங்காயை உரித்து உடைத்து உள்ளே காட்ட சொன்னபோது அதிசயமாய் தேங்காயின் அந்த இளநீரில் மீன் துள்ளியது.

வாய்மொழி வரலாறு-3

முத்துசாமி தம்பிரானின் சமஸ்தானத்தில் இளவரசராக ஒரு வார காலத்தில் பட்டம்சூட்டப்பட வேண்டிய அரசகுமாரன் திடீரென்று காய்ச்சல், ஜன்னி வந்து பாதிக்கப்பட்டு எல்லா ராஜ வைத்தியங்களும் பலனளிக்காமல் இறந்து போகிறான். குலசோழிய பார்ப்பனர்களாலும் எதுவும் செய்யமுடியவில்லை. சமஸ்தானமே துயரத்தில் ஆழ்ந்த சமயம் ஞானி பீரப்பா அழைக்கப்பட்டு அரண்மனைக்குச் செல்கிறார். அங்கே அரசகுமாரன் இறந்துகிடந்த அறைக்குள் சென்று கதவுகளைச் சாத்திவிட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் இளவரசனை உயிரோடு எழுப்பி கூட்டி வருகிறார்.

வாய்மொழி வரலாறு-4

பத்மநாபபுரம் கோட்டை கட்டிக் கொண்டிருக்கும் சமயம் அவ்வழியாக சென்ற பீரப்பாவை கோட்டையிலுள்ள சிலர் கேலி செய்ததின் விளைவாக கோட்டை கட்ட முடியாமல் ஆகிப்போகிறது. கற்சுவரை கட்டும்பொருட்டு ஒரு கல்லை வைத்தால் மறுகல் தகர்ந்து விழுந்துவிடுகிறது. பிறகு கோட்டையிலுள்ளவர்கள் தங்கள் தவறை உணர, மன்னனும் பீரப்பாவிடம் வந்து வேண்டிக் கொண்டதன் விளைவாக பீரப்பா தன் திருக்கரங்களால் கல்லெடுத்து வைத்தபின்னரே அக்கோட்டை கட்டப்பட முடிந்தது.

வாய்மொழிவரலாறு - 5

அதிகாலையில் அடர்ந்த காட்டிற்குள் சென்று அருவி நீருக் கருகே உட்கார்ந்த பீரப்பா தனது கைவிரல்களைத் தொண் டையின் உள்ளேவிட்டு குடல் முழுவதையும் வெளியே எடுத்தார்கள். அதனை ஒரு கல்லில் வைத்து துணியைத் துவைப்பதைப்போல் துவைத்து எடுத்து மீண்டும் அதை விழுங்கினார்கள். பின் உடல் முழுவதையும் கழுவிக் கொண்டார்கள். ஓங்கிய மரத்தின் உயர்ந்த கிளையொன்றை அவர்கள் உற்றுநோக்கவே அது வளைந்து தாழ்ந்தது. அப்பா அவர்கள் தங்கள் பாதங்களின் விரல்களினால் கிளையைப் பற்றிப் பிடித்துக்கொண்டு தலைகீழாய் தொங்கினார்கள்.

வாய்மொழி வரலாறு - 6

ஆனைமலைச்சாரலில் தவமிருந்த பீரப்பாவின் முன்னே அவரது சீடர்கள் யோகி ஒருவரை அழைத்துவந்தனர். அவர் கூறினார் பக்கத்து பொதிகை மலையிலிருந்து வெளியிடம் வர ஆயிரம் பேருக்குமேல் தலைவராய் இருக்கும் குருவிடம் அனுமதிகேட்டேன். அவர்கள் ஒரு குளிகையினைத் தந்து வாயில் போடச் சொல்லி பசி, தாகம், களைப்பு தெரியாமல் இருக்கும். பறவைகளைப் போன்று ஆகாயத்தில் பறந்து நினைத்த இடம் செல்லலாம். மாலை பூசைக்குமுன் சென்று வா என உத்தரவு தந்தார். ஆனால் இந்த இடத்தில் வரும் போது வாயில்கிடந்த குளிகை தவறி விழுந்துவிட்டது மாலை பூசைக்கு செல்லாவிடில் பாவம் கிடைக்கும் என்றார். நின்ற அவர் பீரப்பா உபதேசம் செய்தபோது கலிமா சொல்லி முஸ்லிமாகிவிடுகிறார். என் கூட்டத்தினரிடமும் குருவிடமும் உங்களைப் பற்றி நான் எடுத்துகூறுவேன் பொதிகை மலைக்கு எப்படி செல்வது என்று கேட்டபோது பீரப்பா கீழே குனிந்து ஒருசிறு கல்லினை எடுத்து வாயில் போட்டுக் கொள் முந்திய குளிகையைவிடச் சிறந்தது நினைத்த இடத் திற்கு சென்று சேரலாம் என்று கூறுகிறார். பீரப்பாவைப்பற்றி கேட்டு அதிசயப்பட்ட பொதிகைமலையின் குரு பிறகொரு நாள் பீரப்பாவை சந்திக்க வருகிறார். ஞானம் சம்பந்தமான ரகசியங்களை தெளிவாக பீரப்பா எடுத்துக்கூற அதனால் கவரப்பட்டு கலிமாவை மொழிந்து பீரப்பாவின் முன் முஸ் லிமாக மாறுகிறார். என் பெயர் பீர்முகம்மது, உம்முடைய பெயர் எகீன் முகம்மது. நீரே இன்று முதல் எனது முதல் கலீபா ஆவீர் என்று அறிவிக்கிறார்கள். இன்றும் தக்கலை தர்காவில் எகீன் முகமது சாகிபுவினுடையது என்பது இந்த ஊர்மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகவும் இருக்கிறது.

தெளிவுகள்:

இந்த வாய்மொழி வரலாறுகளின் வழியாக சமஸ்தானத்து மன்னன்,மந்திரிகள், புரோகித பார்ப்பனர்கள் ஆகியவர் களைவிட பீரப்பா ஆற்றலிலும் அறிவிலும் உயர்ந்தவர் என்ப தற்கான குறிப்பு உணர்த்தப்படுகிறது. அடித்தட்டு மக்களை வரிகளாலும் உயர்ஜாதி வெறியாலும், கொடுந்தண்டனைகளாலும் நசுக்கிக் கொண்டிருந்த சமஸ்தான மன்னர்களை எதிர்த்து நிற்கிற ஆற்றலை பீரப்பா பெற்றிருந்தார் என்பதாகவும் அறிந்து கொள்ளலாம்.இதற்கு ஆதாரமான குறிப்பாக காலங்காலமாக இம்மக்களால் பாடப்படுகிற சாகிப்பைத் என்னும் பீரப்பா பற்றிய புகழ்ப்பாடலின் 16வது பாடல் வரிகளை சொல்லலாம்.

விரோதிகளான காபிர்கள் அக்கிரமங்கொண்டு சிறைப் படுத்த முயன்றபோது, அதனை முறியடித்து வெற்றி பெற்ற நமது பெருமைக்குரிய பீர்முஹம்மது நாதர் அவர்கள். (வதப்ஈன்லிஹப்ஸில் காபிரீனவ பக்றுனா, பீர்முகமது ஸாகிபுல் காமினில்வலி) இதற்கு பீரப்பாவின் அறிவாற்றல், ஞானத்திறன், சரக்கலை மருத்துவ அறிவு போன்றவை பயன் பட்டிருக்கக்கூடும். ஒன்றை மற்றொன்றாகவோ, ஒரு பொருளை மற்றொரு பொருளாகவோ, பொருளே இல்லாத வெற்றிடத்தில் ஏதேனும் ஒரு பொருள் உள்ளது போன்றோ கருதவைக்கும் ரசவாதக் கலைசார்ந்த புராதன உளவியல் விஞ்ஞானத்தின் கூறுகளும் தவநிலையும் யோகப் பயிற்சி யின் அம்சங்களும், இந்து சமயத்தினரும் பீரப்பாவின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமான நிகழ்வுகளும் இதனுள்ளே உட்பொதிந்து கிடப்பதை கவனிக்கலாம்.

குர்ஆனிய வசனங்களுக்கும் விளக்கம் சொல்கின்ற தப்ஸீர், நபிமுஹம்ம்து ஸல்-அம் சொல்செயல்களை விளக்கும் ஹதீஸ் பிக்ஹு இஸ்லாமிய சட்டங்கள், குர்ஆனை இனிமையாக பல இசை வடிவங்களில் வெளிப்படுத்தும் கிராஅத், உசூல், இலக்கணம், தர்க்கசாஸ்திரம் என பலவித கலை நுட்பங்கள் இஸ்லாமிய கலாசாரத்தில் உண்டு.

இரும்பைத் தங்கம்போலாக்கும் கீமியா, பிறர்கண்ணுக்கு தெரியாமல் மறைந்துவிடும் ஹீமியா, மறைபொருளை அறிவிக்கும் சீமியா, பல உருவத்தோற்றம் கொள்ளும் ரீமியா ஆகிய நான்கு கலைகள் பற்றிய பதிவுகளையும் கவனத்திற் கொள்ள வேண்டும். அவயங்களின் துடிப்புகளால் அறியக் கூடிய துடிசாஸ்திரம் தாதுவின் குணக்குறிகள் அறிதல், கனவின் பலன்கள் புரிதல் சரஓட்டம், நாடி சாஸ்திரம், மூலிகை மருத்துவம், வைத்தியக்கலைகளிலும் விளங்கினர். இந்தப் பின்னணியினூடேதான் சூபிகளின் கராமாத்துகள் எனும் அற்புதங்களை மீள்வாசிப்பு செய்ய வேண்டும். எனவே சிலர்கூறுவதுபோல் கராமாத்துகள் என்னும் வாய் மொழி கதையாடல்களை வெறும் கட்டுக்கதைகளென நிரா கரிக்க வேண்டியதில்லை. அந்த அதிசய கதையாடல்களுக்கு மதிப்பளித்து அவற்றில் உயிரும் உணர்வுமாய் கலந்திருக்கும் நுண்ணிய அளவிலான பண்பாட்டியல் உண்மைகளைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். அப்போதுதான் ஆன்மீகத் தின் அர்த்தங்கள் வாழ்வியல் சார்ந்து புதிய தளங்களில் விரிவடையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?